Skip to main content

தபால்காரன்.---குறுங்கதை






From s.raa's website
குறுங்கதை 24
தபால்காரன்.
தனக்குத் தானே தபால் எழுதிக் கொள்ளும் ஒருவர் இருந்தார். எழுபது வயதைக் கடந்துவிட்ட அவர் தனியே வசித்தார். அவரது இருபதிமூன்றாவது வயதில் மனைவி இறந்து போனார். அதன்பிறகு அவர் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை. உறவு என்று அவரைத் தேடி வர எவருமில்லை.
அவருக்குச் சொந்தமாக மலைச்சரிவில் கொஞ்சம் நிலம் இருந்தது. அதன் ஒரு பகுதியில் வீடு அமைத்துக் கொண்டு வீட்டின் பின்னால் காய்கறிகள் விளைவித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவரது தோட்டத்தில் இரண்டு பிளம்ஸ் மரங்கள் இருந்தன.
எந்த வயதில் அவர் தனக்குத் தானே கடிதம் எழு துவங்கினார் என்று தெரியவில்லை. ஆனால் அன்றாடம் காலை உணவை முடித்தவுடன் அவர் கடிதம் எழுத ஆரம்பிப்பார். ஒவ்வொரு சொல்லாக யோசித்து எழுதுவார். அதுவும் தபால் அட்டையில் தான் கடிதம் எழுதுவார்.
பெரும்பாலும் அந்தக்கடிதத்தில் அவர் சுற்றுப்புறத்தில் கேட்ட பறவையின் குரல் பற்றியோ, பிளம் மரத்திலோடும் அணில் பற்றியோ, சாலையினைக் கடந்து செல்லும் பள்ளிச்சிறுமிகள் பற்றியோ அல்லது அன்று சாப்பிட்ட காலையுணவின் ருசி பற்றியோ தான் எழுதுவார். அரிதாகச் சில நேரம் தன் பால்ய நினைவுகளை விவரிப்பார். சில நாட்களில் எழுதுவதற்கு வார்த்தைகள் தோன்றாத போது தபால் அட்டையில் ஏதாவது படம் வரைந்து அனுப்புவார்.
தனக்குத் தானே பேசிக் கொள்வதைப் போன்றது தான் தனக்குத் தானே எழுதிக் கொள்வதும். எத்தனையோ பேர் டயரி எழுதுகிறார்கள். நான் அதற்குப் பதிலாகக் கடிதம் எழுதிக் கொள்கிறேன் என்று சுயசமாதானம் சொல்லிக் கொள்வார்
ஒருவன் தனக்குத் தானே கடிதம் எழுத துவங்கும் போது தான் தன்னை அறிந்து கொள்ளத் துவங்குகிறான். தன்னைக் கொண்டாடத் துவங்குகிறான். தன் சரி தவறுகளைக் கண்டறிகிறான். சொற்கள் தானே உண்மையான கண்ணாடி.
கடிதத்தைத் தபால் பெட்டியில் போடுவதற்காக மலையடிவாரம் வரை நடந்து போவார். அதற்கு ஒரு மணி நேரமாகும். சிவப்பு தபால் பெட்டியில் கடிதத்தைச் சேர்த்துவிட்டு மலையேறி வீடு வந்து சேர மதியமாகிவிடும். முதல் நாள் அவர் போட்ட கடிதம் மறுநாள் மாலை அவர் வீட்டிற்கு வந்து சேரும். ஆரம்ப நாட்களில் தபால்காரனுக்கு இது என்ன முட்டாள்தனம் என்று தோன்றியது. ஆனால் அவனுக்கும் தலை நரைக்கத் துவங்கியதும் தன்னைத் தவிர ஒரு மனிதனுக்கு வேறு துணையில்லை என்ற பட்டது.
தனக்கு வந்த கடிதத்தை அவர் ஒரு போதும் படிப்பதில்லை. அப்படியே மர பீரோவில் போட்டுவிடுவார்.
தபால் எழுதுவதும் தபாலைப் பெறுவது தரும் மகிழ்ச்சி தானே முக்கியம்.
தபாலைப் பயன்படுத்துகிறவர்கள் குறைந்துவிட்டார்கள் என அந்த மலை நகரிலிருந்த தபால் நிலையம் மூடப்பட்டது. சிவப்பு நிற தபால் பெட்டியை இப்போது திறப்பதேயில்லை. ஆனாலும் அவர் தபால் எழுதுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. தபால் பெட்டியில் போட மாட்டார். அதன்பிறகு தபால்காரன் வருவது நின்று போனது.
அவருக்கு இருந்த ஒரே வருத்தம் ஒரு தபால் வருவதன் சந்தோஷத்தைக் கூட ஏன் உலகம் பறித்துக் கொள்கிறது என்பதே.
அதை யாரிடம் சொல்லிப் புலம்புவது என்று தான் அவருக்குத் தெரியவில்லை.


 http://www.sramakrishnan.com/?p=10098

Comments

Popular posts from this blog

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்,

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம், நொறத் தவளை மேளதாள வாத்தியமாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம்; தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம், கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம்; சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம், நத்தா கூட்டு தண்ணீரே பன்னீராம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; புஞ்சைக் காட்டு குருவித் தாழை, போட்டுக் கொள்ள வெத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம்; சு...

மாமரம் நட்ட கதை!

டில்லி அரசரை வென்ற கதை மாமரம் நட்ட கதை! ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார். டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்...

Bajji

Conversation opened. 1 read message.        “Bajji” (Tamil) மாலை நாலு மணி வாக்கில் ஏதேனும் ஓர் ஓட்டலில் காபி குடிக்கப் போனால், முதலில் கேட்பது, ‘சூடா பஜ்ஜி இருக்கா?’ – இருந்து விட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தாற்போல ஒரு திருப்தி! மாலை டிபன்களில், தோசை, இட்டிலி போன்ற ஹெவிகளுக்கும், மிக்சர், பக்கோடா போன்ற லைட்களுக்கும் இடைப்பட்ட பஜ்ஜி போண்டாவுக்கே என் பொன்னான ஓட்டு! அதுவும் பெயரிலேயே மரியாதையுள்ள ‘பஜ்’ஜி’க்கு, என்றும் என் நாக்கு ’ஏர் இந்தியா’ ஸ்டைல் மரியாதை செய்யும்! அந்தக் காலப் பெண் பார்க்கும் படலத்தில், சொஜ்ஜிக்கும், பஜ்ஜிக்கும் முக்கியப் பங்கு உண்டு. (சொஜ்ஜி-பஜ்ஜி காலாகாலத்துக்கும் நல்ல சுவையான ஜோடி!). இதோடு நல்ல கும்மோணம் டிகிரி காபியும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம் – கண்ணை மூடிக் கொண்டு பெண்ணுக்கு ’ஓகே’ தான் – ஆனால், பின்னாளில் அதே வீட்டில் தயாராகி வரும் பஜ்ஜி-காபியின் தரத்துக்குக் கம்பெனி உத்திரவாதம் அல்ல! பஜ்ஜி கவனத்தில் தலையாட்டிவிட்டு, பின்னர் வ...